Thursday 6 December 2018

ஆதரவு ! - பொதிகை மின்னல் (டிசம்பர் - 2018) இதழில் வெளிவந்தது

ஆதரவு !

“அய்யா, நாளைக்கு வருமான வரி வழக்கு தீர்ப்பு வருது. நீங்களும் வந்தா நல்லா இருக்கும்.” என்றார் வழக்கறிஞர் ரத்னாகர்.

“அவசியம் வரனுமா?” என்று கேட்டார் பிரபல தொழில் அதிபர் மதன்.


“நீதிபதி, புதுசா வந்திருக்காங்க. நீங்களும் வந்தா நல்லாயிருக்கும்” என்றார் ரத்னாகர்.


“சரி. வரேன். நீங்க ஆக வேண்டிய வேலைகளை பாருங்க” என்றான் மதன்.


மறுநாள், நீதிமன்றத்தில்,


“ஆகவே, அபராதமும் சேர்த்து 5 கோடி கட்டவேண்டும். இல்லை என்றால் விளையாட்டு வீரர் ஒருவரை தத்தெடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வீரர் ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்கும் வரை.” என்று தீர்ப்பளித்தார் நீதிபதி.


“விளையாட்டு வீரரை தத்தெடுக்குறோம்” என்றான் மதன். அனைத்தும் முடிந்ததும் காரில் ஏறியதும்,


“அய்யா, 5 கோடி பணத்தை கட்டினால் வேலை முடிந்திருக்குமே. விளையாட்டு வீரருக்கு இன்னும் பல கோடி செலவாகுமே.” என்றார் ரத்னாகர்.


“சரிதான். ஆனால் விளையாட்டு வீரரை யாரும் தத்தெடுக்க மாட்டுறாங்க. 5 கோடி பணம் கட்டுவதை விட 10 கோடி விளையாட்டு வீரருக்கு செலவு செய்து, ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்கினால் இந்தியாவுக்கே பெருமை. நமது நிறுவனத்திற்கும் விளம்பரம். அதனால் வருமானம் அதிகம் கிடைத்தால் தாராளமாக செலவு செய்யலாமே.


இதை பார்க்கின்ற மற்ற நிறுவனங்களும் செய்ய ஆரம்பிக்கும், கண்டிப்பாக ஒலிம்பிக்கில் பதக்கப்பட்டியிலில் நம் நாடும் இடம் பெறும். அந்த நீச்சல் வீரர் மாதிரி, ஆதரவு கிடைக்காமல் வெளிநாட்டில் போய் கலங்கிய மனதுடன் வேலை பார்க்க வேண்டி இருக்காது.” என்றான் மதன்.


“உங்களுக்கு தொலை நோக்கு பார்வை மட்டுமல்ல, பெரிய மனசும்” என்றார் ரத்னாகர்..








Wednesday 28 November 2018

சந்ததி ! - குமுதம் (05-12-2018) இதழில் வெளிவந்தது

சந்ததி !

“சித்ரா, 10 பாக்கெட் பிஸ்கெட் போதுமா?” என்று கேட்டாள் ஜெயந்தி.

“ரம்யாகிட்ட கேளு. போதும்ன்னா வாங்கு” என்றாள் சித்ரா.


“சித்ரா, குங்குமம் எத்தனை டப்பா வேணும்” என்றாள் ரேவதி.


“ரம்யாகிட்ட கேளு. எவ்வளவு சொல்லுறாளோ வாங்கு” என்றாள் சித்ரா.


“சித்ரா, சரண”யாவை கோயிலுக்குக் கூட்டி போயிட்டு வந்திடவா,” என்றாள் விஜி.


“ரம்யாகிட்ட சொல்லிட்டு கூட்டி போயிட்டு வா” என்றாள் சித்ரா.


“என்ன சித்ரா, எல்லாத்தையும் உன் மகள் ரம்யாகிட்ட கேட்க சொல்லுற.” என்றாள் விஜி.


“நான் 30 வருஷமா எல்லாத்தையும் பார்த்துகிட்டு இருக்கேன். இனிமே நம்ம பிள்ளைகள் பாக்கனும். அது மட்டுமில்லாம, நாமெல்லாம் இருக்கும் போதே, அவர்கள் முடிவெடுக்க விடனும். அவர்கள் தவறான முடிவு எடுக்கும் போது எச்சரிக்கனும். நம்முடைய அனுபவத்தை அவர்களுக்கு சொல்லித்தரனும். 


நாம இருக்கும் போதே நம்ம பிள்ளைகள் திறமையாக நிர்வாகிக்க முடிஞ்சுதுன்னா, அவர்களோட எதிர்காலம் இன்னும் நல்லா இருக்கும். இப்ப, ரம்யாகிட்ட சொல்லிட்டு கூட்டி போயிட்டு வா. விஜிம்மா.” என்றாள் சித்ரா. 


“நல்ல அக்கா, கொடுத்து வைத்த மகள் மட்டுமல்ல, உன் தங்கைகளாகிய நாங்களும்,” என்று சொன்னாள் விஜி.





Wednesday 7 November 2018

இசை இளவரசி ! - பொதிகை மின்னல் (நவம்பர் - 2018) இதழில் வெளிவந்தது

இசை இளவரசி !

“ஏன்டி பிரிதிக்கா, பாட்டு போட்டியில பாடி உலக புகழ்வந்துடுச்சில்ல!” என்றாள் ராகவி.

“ஆமாம்” என்றாள் பிரிதிக்கா.

“பக்கத்து நகரத்துல இருந்து சென்னையில இருக்கிற பெரிய நடிகரே உன் படிப்பு செலவ ஏத்துகிட்டார்.” என்றாள் ராகவி.

“ஆமாம்டி ராகவி. என்ன சொல்ல வர” என்றாள் பிரிதிக்கா.

“நீ சென்னைக்கு போய் பெரிய பள்ளிக்கூடத்தில சேரலாமுல்ல. இந்த மொட்ட கிராமத்தில் இன்னும் இருக்க. அங்கே போனா நிறைய வாய்ப்புகளும் கிடைக்கும்.” என்றாள் ராகவி.

“நான் புகழ் பெற்றதே இந்த மண்ணின் மணத்திற்காகத்தான் ராகவி. இந்த ஊர்ல உள்ள எல்லோரும் என்னை தங்கள் வீட்டு குழந்தையா நினைக்கிறாங்க. முதல் முறையா விமானத்தில் வந்து இறங்கிய போது, அவங்க வீட்டு பிள்ளை வெளிநாடு போயிட்டு வந்த மாதிரி ஆரத்தி எடுத்து எல்லாம் இன்னும் என் கண்ணுக்குள்ளே நிக்குது.

ஏதாவதுன்னா ஊரே என்னை தாங்கு… தாங்கு… ன்னு தாங்குறாங்க. என் ஆசிரியர்கள், தோழிகள், என்னுள் தன்னம்பிக்கையை விதைத்த என் குரு, எல்லோருடைய அருகிலும் நான் இருக்கனும். 

அதுமட்டுமில்லாம இந்த இசையின் ஞானம் இந்த ஊரும் இந்த
சொந்தங்களும்தான் கொடுத்தது. அதை மற்றவர்கள் உரிமை கொண்டாட நான் விரும்பவில்லை. அவர்களுக்கு இந்த உலகத்தையே இங்கிருந்தே காண்பிக்க வேண்டும். என்பதுதான் என் ஆசை.” என்றாள் பிரிதிக்கா.

"ரொம்ப பெரிய மனசுடி. அதான் இந்த ஊரில் எல்லோரும், எங்கள் ஊர் தேவதை என்று கொண்டாடுகிறார்கள்." என்றாள் ராகவி.




சங்கடம் ! - குமுதம் (31-10-2018) இதழில் வெளிவந்தது

சங்கடம் !

“முன்னாடி மாதிரி இல்ல லலிதா. சில்லரை வியாபாரம் குறைஞ்டுச்சி. பெரிய
வியபாரம் ரொம்பக் குறைஞ்சுடுச்சி. அவர் இருக்குற வேலைல சம்பளம் சரியா
தரமாட்டுறாங்க. வேற வேலைக்குப் போகனும்முன்னு நினைச்சா பாதிச் சம்பளம்
தருவேன்னு சொல்லுறாங்க.
அவருக்கு இந்த வேலையும் விடமுடியலை, வேற வேலைக்கும் போக
முடியவில்லை. வீட்டு லோன் சரியா கட்ட முடியவில்லை. வீட்டையும் விற்க முடியாம தவிப்பா போயிட்டு இருக்கோம்.” என்றாள் லெஷ்மி ஆனந்த்.
“அப்படியாம்மா. எங்களுக்கும் அப்படித்தான் இருக்கு. அதனாலத்தான் எங்க
வீட்ட விற்க போகிறோம். கவலைபடதீங்கம்மா எல்லாம் சரியாயிடும்.” என்று
வருத்தமாய்ச் சொல்லிக் கிளம்பினாள் லலிதா.
“ஏன் லெஷ்மி, நீ சொன்ன மாதிரி எந்தப் பிரச்சனையும் இல்லையே. அப்புறம்
ஏன் அப்படிச் சொன்ன?” என்று வீட்டுக்குள் வந்ததும் கேட்டார் ஆனந்த்.
“இல்லங்க… ஏதோ அவங்களுக்குக் கஷ்டம். அதனால ஆசை ஆசையாய் வாங்கிய வீட்டை விற்க போறாங்க. அது எவ்வளவு துயரமானதுன்னு நமக்குத் தெரியுமே... அதனால அவங்க மனசு கஷ்டபடாம இருக்க நாமளும் கஷ்டபடுறோம்ன்னு சொன்னேன்.
நம்ம நிலையைக் கேட்டு, பரவால்ல நம்மல வீட்டை விற்கவாச்சும் முடிச்சுதே என்ற நிம்மதியோடு சந்தோசமா வீட்டை விற்பாங்க!” என்ற லெஷ்மியை மெச்சினான் ஆனந்த்



Sunday 15 July 2018

கடமை! - 20 ஜுலை - 2017 பொதிகை சாரல் இதழில் வெளிவந்தது

கடமை !

“அப்பா புதுசா கேமரா வாங்கி இருக்கேன்.” என்று ஆர்வமாய் காட்டினான் மதன்.

“அவ்வளவு பணம் ஏது?” என்று கேட்டார் மாணிக்கம்.

“எனது நண்பன் கிட்ட கேமரா இரவல் வாங்கி, சில விளம்பரத்துக்கு, புகைப்படம் எடுத்துக் கொடுத்தேன். அதில் கிடைத்த பணம்” என்றான் மதன். மாணிக்கம் அதை வாங்கி பார்த்துவிட்டு, சோம்பல் படாமல் நன்றாக உழைக்க சொல்லி, வாழ்த்துக்கள் சொன்னார்.

அதன் பின் எதையும் மதன் தன் அப்பாவிடம் கேட்பதில்லை. புதிதாக வாங்குதை மட்டும் கொண்டு வந்து காட்டுவான். கல்லூரி முடிந்து சில நிறுவனங்களில் பணிபுரிந்து சில வருடங்கள் கழிந்த பின் தனியாக நிறுவனம் தொடங்க போவதாக சொன்னான் மதன். சில மாதங்கள் வரை வங்கியில் கடன் கிடைக்காமல், மதன் தடுமாறுவதை கவனித்த மாணிக்கம்.

மதனை காத்திருக்க சொல்லிவிட்டு போனார், ஒரு மணி நேரம் கழித்து, வந்து அவனது மேஜையில் நிறைய தங்க காசுகளை அடுக்கினார்.

“இது உனக்கு நான் வாங்கி கொடுக்க வேண்டிய கேமரா போன்ற பொருட்களுக்கான பணத்தில் இந்த தங்க காசு வாங்கி வங்கியில் வைத்திருந்தேன். அப்பவே இந்த பணத்தை கொடுத்திருக்கலாம், ஆனா உன் உழைப்பில் வாங்கிய பொருட்களில் கிடைக்கும் தன்னம்பிக்கையும் துணிச்சலும் அப்பா வாங்கி கொடுத்தால் கிடைக்காது. வெறியோடு ஆத்மார்த்தமாய் உழைத்திருக்கவும் முடியாது. எது வாங்கினாலும் அப்பா பணம் தருவாங்க என்ற எண்ணமும் சோம்பேறித்தனமும் வந்திருக்கும்.

குழந்தைகளுக்கு பணம் கொடுப்பது மட்டும் அப்பாவின் கடமையல்ல தன்னம்பிக்கையும் தைரியத்தை கொடுப்பதுதான் அப்பாவின் உண்மையான கடமை” என்றார் மாணிக்கம்.


Thursday 10 May 2018

வாழ்க்கை! - பாவையர் மலர் (ஏப்ரல் 2018) இதழில் வெளிவந்தது

வாழ்க்கை !

அழைப்பு மணி அழைத்ததும், கதவை திறந்த, சாந்தா அதிர்ந்தாள்.
“வா பாட்டி, உனக்கு விசயம் தெரிந்ததும் என்னைவிட்டு பிரிந்துடுவியோன்னுதான் உன்கிட்ட சொல்லல.” என்று அழுகையின் ஊடே சொன்னாள் சாந்தா. பாட்டி அவளை இறுக அணைத்துக் கொண்டாள்.

“அசடு, நீ எதையும் யோசிச்சிதான் செய்வ. எனக்கு தெரியும். காலம் மாறிடுச்சி. அதுக்குத் தகுந்தாற்போல நாமும் மாறிக்கனும். உன் திருமண ஏற்பாடுகளை கவனி. உன் அப்பா அம்மா சம்மதிக்கலைன்னு கவலைபடாதே.. நான் இருக்கேன் உனக்கு.” என்று ஆறுதலாய் சொன்னாள் பாட்டி.

இதை கேட்டதும் அசுர பலம் வந்திருந்தது சாந்தாவுக்கு. அந்த வேகத்திலயே அனைத்து ஏற்பாடுகளையும் விரைந்து முடித்தாள். அன்று அவளுக்கு திருமணம்.

தாலிக்கட்டி முடிந்ததும், நிமிர்ந்த சாந்தா சந்தோசத்தில் திணறினாள். அட்சதையை தூவியவாறு எதிரே அவளின் அப்பாவும் அம்மாவும் கலங்கிய கண்களுடன் நின்றிருந்தார்கள். நிகழ்ச்சி முடிந்ததும். தனியாக அழைத்துப் போன அம்மா,

“உன் குடிகார கணவன் இறந்ததும், நாங்களாவது நல்ல மாப்பிளையாக பார்த்து, உனக்கு மறுமணம் செய்து வைத்திருக்கனும். அந்த கால மனுஷியான பாட்டிக்கு இருந்த தைரியம் கூட எங்களுக்கு இல்லாமல் போயிடுச்சிடி. மத்தவங்க வார்த்தைகளுக்காக கவலைப்பட்ட நாங்க, உன் வாழ்க்கைக்காக கவலைப்படாம விட்டுட்டோமே. எங்களை மன்னிச்சிடு சாந்தா.” என்று சாந்தாவின் காலில் விழப்போன அம்மாவை, தடுத்து சந்தோசமாய் அணைத்தாள் சாந்தா.


Friday 4 May 2018

மருத்துவம்! - பாக்யா (30-04-2018) இதழில் வெளிவந்தது

மருத்துவம் !

டாக்டர் கல்பனா சுரேஷ் க்ளினிக்ல மட்டும் அதிகமாக கூட்டம் வருது. என் க்ளினிக்ல இரண்டு, மூன்று பேர்தான் வாராங்க. கட்டணம் கம்மியாதான் வாங்குறேன். குறைவான விலையில நல்ல மருந்துகள் எழுதி கொடுக்குறேன். முதல்முறை வராங்க. அடுத்த முறை வரமாட்டுறாங்க. ஏன்னே புரியலை சார்என்று பிரபல மருத்துவமணையின் தலைவர் வாசுதேவனிடம் கேட்டார் டாக்டர் தங்கச்செல்வி.

                அதை கேட்டதும் செய்ய வேண்டியதை சொல்லி அனுப்பினார். அடுத்த சில மாதங்கள் கழித்து, தங்கச்செல்வியிடம் க்ளினிக் பற்றி கேட்டார்.

                “நீங்க சொன்ன மாதிரி நோயாளியாக, கல்பனா க்ளினிக் சென்று பார்த்தேன். அப்போதுதான் புரிந்தது, நான் எவ்வளவு தப்பு செய்திருக்கேன்னு.” என்றார் தங்கச்செல்வி.

                “என்ன தப்பு செய்தீங்க?” என்றார் வாசுதேவன்.

                “நோயாளிகள் எது சொன்னாலும் கவனமா கேட்கறது இல்ல, சும்மா சிரிச்சி, அவர்களின் கஷ்டத்தை கிண்டல் செய்திருக்கேன். நாய் குதறுகிற மாதிரி அனைவரையும் வார்த்தைகளால் குதறியிருக்கேன். ஏதோ நான் மட்டுமே கடவுள் மாதிரி தலைக்கனத்தோட மருத்துவம் பார்த்திருக்கேன்.

                ஆனா கல்பனா சுரேஷ் பெயரில் மட்டுமல்லாமல் பேசுவதிலும் கனிவான மொழியில் தான் பேசுகிறார். நோயாளிகள் சொல்வதை மிககவனமாக கேட்கிறார். சரியாகிடும் என்று ஆறுதலாக பதில் சொல்கிறார். அதிலேயே பாதி நோய் சரியாகிடும், அதனால்தான் நோயாளிகளுக்கு உண்மையான கடவுளாக தோன்றுகிறார்.

அதனால்தான் நிறைய பேர் காத்திருந்து அவரிடம் மருத்துவம் பார்த்து விட்டு செல்கிறார்கள், என்பதை உணர்ந்து கொண்டேன்.” என்ற தங்கச்செல்வி மனம் தெளிவடைந்திருந்தது..




Friday 19 January 2018

அன்பு அதிர்ச்சி! - குமுதம் (24-01-2018) இதழில் வெளிவந்தது

அன்பு அதிர்ச்சி!

என்ன சிம்லா, நீ வாங்கனுமுன்னு சொல்லிக்கிட்டு இருந்த, 42 இன்ச் எல்..டி. டிவியை உனக்காக சஸ்பென்சாக வாங்கி வந்து மாட்டினா, சந்தோசத்துல கட்டிபிடிச்சிக்குவேன்னு பார்த்தா, இப்படி கோவப்படுற?” என்று கேட்டான் முத்துச் சோழன்.

என்னையும் கேட்டிருக்கலாமில்ல. ஏன்டா கேட்காம வாங்கின?” என்றாள் சிம்லா.

உனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்கலாமுன்னு நினைச்சி வாங்கினேன். உனக்கு ரொம்ப பிடிக்குமேன்னு க்ரீன் ஆப்பிளும் வாங்கி வந்து காத்திருந்தா இப்படி கோவப்படுவேன்னு நினைக்கலை.” என்று வருத்தமாய் சொன்னான் முத்துச் சோழன்.

உனக்கு சொன்னா புரியாது போடா.” என்றாள் சிம்லா.

என் செல்லம்ல என் பட்டுல்ல, கோவப்படாதடி சிம்ஸ்.” என்றான் முத்துச் சோழன்.

பெட்ரூம் போனீங்களா?” என்று கேட்டாள் சிம்லா.

இல்லையே வந்ததிலிருந்து ஹால்ல டி.வி மாட்டிக்கிட்டு இருந்தேன்.” என்றான் முத்துச் சோழன்.

முதல்ல போயிட்டு வாங்க.” என்றாள் சிம்லா.

சற்றே மன நிறைவுடன் படுக்கை அறைக்கு சென்ற முத்துச் சோழன் உறைந்து நின்றான்.

52 இன்ச் எல்..டி. டிவி மாட்டி இருந்ததுடன் மேசையில் தட்டு நிறைய அவனுக்கு பிடித்த சப்போட்டா, கிவி பழங்கள் அடுக்கப்பட்டிருந்தது.