Monday 10 April 2017

சொர்க்கத் தீவு! - குமுதம் (12-04-2017) இதழில் வெளிவந்தது

சொர்க்கத் தீவு !

“மன்னிச்சிடுங்க அத்தை ஒரே டிராஃபிக். அதான் வர நேரம் ஆயிடுச்சி.” என்றாள் பாரதி

“பரவால்லடா பாரதி. உனக்கு பிடிச்ச சமையல் பண்ணிட்டேன். துணி எல்லாம் மிஷின்ல போட்டு காய வச்சிட்டேன். பாப்பாவுக்கு சாதம் ஊட்டிவிட்டுட்டேன்.

இவ்வளவு நேரம் விளையாடிக்கிட்டு இருந்தா. இப்பதான் தூங்கினா. சரி சீக்கிரம், ஸ்ரீதர் வரதுகுள்ள சேலைய மாத்து.” என்றார் மாமியார் மஹாலெஷ்மி.

“ரொம்ப தேங்ஸ் அத்தை” என்றாள் பாரதி. சிறிது நேரம் கழித்து, “என்ன மஹா உன் மருமகள இந்த தாங்குதாங்குற?” என்றார் பக்கத்து வீட்டு காமாட்சி.

“ஏன்? கல்யாணம் முடிஞ்சு யார் வீட்டுக்கோ போகப்போற மகளை தாங்கலாம். கடைசி வரை கூடவே இருக்க போற மருமகளைத் தாங்கக் கூடாதா?” என்றாள் மஹாலெஷ்மி.

“இருந்தாலும் கொஞ்சம் அதிகம்தான்.” என்றாள் காமாட்சி.

“இப்படி தாங்கலேன்னாலும் ஒரு மனுசியா என் பொண்ணை அவள் மாமியார் பார்த்திருந்தா, என் பொண்ணு இந்த உலகத்தை விட்டு போயிருக்க மாட்டா. செல்லமா வளர்த்த தங்கத்தை தூக்கி நெருப்புக்கு கொடுத்துட்டு நான் பட்ட கஷ்டம் யாருக்கும் வரக்கூடாதுன்னதான் காமு.” என்று கண்கள் கலங்கிடச் சொன்னாள் மஹாலெஷ்மி.

“உண்மைதான் மஹா, என் மருமகளை நானும் தாங்குறேன். நன்றி மஹா” என்றார் காமாட்சி.

கிச்சனில் கேட்டுக் கொண்டிருந்த பாரதியின் கண்களும் கலங்கின.