Wednesday 28 November 2018

சந்ததி ! - குமுதம் (05-12-2018) இதழில் வெளிவந்தது

சந்ததி !

“சித்ரா, 10 பாக்கெட் பிஸ்கெட் போதுமா?” என்று கேட்டாள் ஜெயந்தி.

“ரம்யாகிட்ட கேளு. போதும்ன்னா வாங்கு” என்றாள் சித்ரா.


“சித்ரா, குங்குமம் எத்தனை டப்பா வேணும்” என்றாள் ரேவதி.


“ரம்யாகிட்ட கேளு. எவ்வளவு சொல்லுறாளோ வாங்கு” என்றாள் சித்ரா.


“சித்ரா, சரண”யாவை கோயிலுக்குக் கூட்டி போயிட்டு வந்திடவா,” என்றாள் விஜி.


“ரம்யாகிட்ட சொல்லிட்டு கூட்டி போயிட்டு வா” என்றாள் சித்ரா.


“என்ன சித்ரா, எல்லாத்தையும் உன் மகள் ரம்யாகிட்ட கேட்க சொல்லுற.” என்றாள் விஜி.


“நான் 30 வருஷமா எல்லாத்தையும் பார்த்துகிட்டு இருக்கேன். இனிமே நம்ம பிள்ளைகள் பாக்கனும். அது மட்டுமில்லாம, நாமெல்லாம் இருக்கும் போதே, அவர்கள் முடிவெடுக்க விடனும். அவர்கள் தவறான முடிவு எடுக்கும் போது எச்சரிக்கனும். நம்முடைய அனுபவத்தை அவர்களுக்கு சொல்லித்தரனும். 


நாம இருக்கும் போதே நம்ம பிள்ளைகள் திறமையாக நிர்வாகிக்க முடிஞ்சுதுன்னா, அவர்களோட எதிர்காலம் இன்னும் நல்லா இருக்கும். இப்ப, ரம்யாகிட்ட சொல்லிட்டு கூட்டி போயிட்டு வா. விஜிம்மா.” என்றாள் சித்ரா. 


“நல்ல அக்கா, கொடுத்து வைத்த மகள் மட்டுமல்ல, உன் தங்கைகளாகிய நாங்களும்,” என்று சொன்னாள் விஜி.





Wednesday 7 November 2018

இசை இளவரசி ! - பொதிகை மின்னல் (நவம்பர் - 2018) இதழில் வெளிவந்தது

இசை இளவரசி !

“ஏன்டி பிரிதிக்கா, பாட்டு போட்டியில பாடி உலக புகழ்வந்துடுச்சில்ல!” என்றாள் ராகவி.

“ஆமாம்” என்றாள் பிரிதிக்கா.

“பக்கத்து நகரத்துல இருந்து சென்னையில இருக்கிற பெரிய நடிகரே உன் படிப்பு செலவ ஏத்துகிட்டார்.” என்றாள் ராகவி.

“ஆமாம்டி ராகவி. என்ன சொல்ல வர” என்றாள் பிரிதிக்கா.

“நீ சென்னைக்கு போய் பெரிய பள்ளிக்கூடத்தில சேரலாமுல்ல. இந்த மொட்ட கிராமத்தில் இன்னும் இருக்க. அங்கே போனா நிறைய வாய்ப்புகளும் கிடைக்கும்.” என்றாள் ராகவி.

“நான் புகழ் பெற்றதே இந்த மண்ணின் மணத்திற்காகத்தான் ராகவி. இந்த ஊர்ல உள்ள எல்லோரும் என்னை தங்கள் வீட்டு குழந்தையா நினைக்கிறாங்க. முதல் முறையா விமானத்தில் வந்து இறங்கிய போது, அவங்க வீட்டு பிள்ளை வெளிநாடு போயிட்டு வந்த மாதிரி ஆரத்தி எடுத்து எல்லாம் இன்னும் என் கண்ணுக்குள்ளே நிக்குது.

ஏதாவதுன்னா ஊரே என்னை தாங்கு… தாங்கு… ன்னு தாங்குறாங்க. என் ஆசிரியர்கள், தோழிகள், என்னுள் தன்னம்பிக்கையை விதைத்த என் குரு, எல்லோருடைய அருகிலும் நான் இருக்கனும். 

அதுமட்டுமில்லாம இந்த இசையின் ஞானம் இந்த ஊரும் இந்த
சொந்தங்களும்தான் கொடுத்தது. அதை மற்றவர்கள் உரிமை கொண்டாட நான் விரும்பவில்லை. அவர்களுக்கு இந்த உலகத்தையே இங்கிருந்தே காண்பிக்க வேண்டும். என்பதுதான் என் ஆசை.” என்றாள் பிரிதிக்கா.

"ரொம்ப பெரிய மனசுடி. அதான் இந்த ஊரில் எல்லோரும், எங்கள் ஊர் தேவதை என்று கொண்டாடுகிறார்கள்." என்றாள் ராகவி.




சங்கடம் ! - குமுதம் (31-10-2018) இதழில் வெளிவந்தது

சங்கடம் !

“முன்னாடி மாதிரி இல்ல லலிதா. சில்லரை வியாபாரம் குறைஞ்டுச்சி. பெரிய
வியபாரம் ரொம்பக் குறைஞ்சுடுச்சி. அவர் இருக்குற வேலைல சம்பளம் சரியா
தரமாட்டுறாங்க. வேற வேலைக்குப் போகனும்முன்னு நினைச்சா பாதிச் சம்பளம்
தருவேன்னு சொல்லுறாங்க.
அவருக்கு இந்த வேலையும் விடமுடியலை, வேற வேலைக்கும் போக
முடியவில்லை. வீட்டு லோன் சரியா கட்ட முடியவில்லை. வீட்டையும் விற்க முடியாம தவிப்பா போயிட்டு இருக்கோம்.” என்றாள் லெஷ்மி ஆனந்த்.
“அப்படியாம்மா. எங்களுக்கும் அப்படித்தான் இருக்கு. அதனாலத்தான் எங்க
வீட்ட விற்க போகிறோம். கவலைபடதீங்கம்மா எல்லாம் சரியாயிடும்.” என்று
வருத்தமாய்ச் சொல்லிக் கிளம்பினாள் லலிதா.
“ஏன் லெஷ்மி, நீ சொன்ன மாதிரி எந்தப் பிரச்சனையும் இல்லையே. அப்புறம்
ஏன் அப்படிச் சொன்ன?” என்று வீட்டுக்குள் வந்ததும் கேட்டார் ஆனந்த்.
“இல்லங்க… ஏதோ அவங்களுக்குக் கஷ்டம். அதனால ஆசை ஆசையாய் வாங்கிய வீட்டை விற்க போறாங்க. அது எவ்வளவு துயரமானதுன்னு நமக்குத் தெரியுமே... அதனால அவங்க மனசு கஷ்டபடாம இருக்க நாமளும் கஷ்டபடுறோம்ன்னு சொன்னேன்.
நம்ம நிலையைக் கேட்டு, பரவால்ல நம்மல வீட்டை விற்கவாச்சும் முடிச்சுதே என்ற நிம்மதியோடு சந்தோசமா வீட்டை விற்பாங்க!” என்ற லெஷ்மியை மெச்சினான் ஆனந்த்