Tuesday 5 December 2017

அரவணைப்பு! - குமுதம் (13-12-2017) இதழில் வெளிவந்தது

அரவணைப்பு !

“என்னடி, சரண்யாவோட, பிறந்த குழந்தைக்கு டிரஸ் வாங்கச் சொன்னா, அவளோட பெரிய பையன் போடுற மாதிரி வாங்கிட்டு வந்திருக்க?” என்று கேட்டாள் சரஸ்வதி.

“ஆமாம் அக்கா, குழந்தைக்கு வாங்கலை. பெரியவனுக்குதான் வாங்கி இருக்கேன்.” என்றாள் வினோதா.

“ஆமாம்டி ஊர்ல இல்லாத அதிசயமா செய்யுற...” என்று புலம்பிவிட்டுச் சென்றாள் சரஸ்வதி.

அடுத்த நாள், சரண்யாவின் வீட்டுக்குச் சென்றார்கள். சரஸ்வதி பிறந்த குழந்தையை மடியில் போட்டுக் கொஞ்சிக் கொண்டிருக்க, வினோதாவோ சரண்யாவின் பெரிய பையனை வீட்டினுள் சென்று தேடிக் கண்டுபிடித்து, அழைத்து வந்து அவனுக்கு அந்த புது ஆடையை அணிவித்து அவனை தன் மடியில் வைத்து, வாங்கி வந்திருந்த இனிப்பை ஊட்டிக் கொண்டிருந்தாள்.

'பிறந்த குழந்தையைப் பார்க்காமல் பெரிய குழந்தையை கொஞ்சிக்கிட்டு இருக்காளே வினோதா' என்று சரஸ்வதிக்கு எரிச்சலாக வந்தது. நீண்ட நேரம் கழித்து விடை பெற்று வீட்டுக்கு வந்தார்கள்.

அடுத்தநாள், வினோதா வெளியே சென்றிருக்கும் நேரம், சரண்யா போனில் அழைத்தாள். 'வினோதாவை திட்டப் போகிறாள்' என்று நினைத்து போனை எடுக்க,

“வினோதா இல்லையா? நேத்து வந்தவங்க எல்லோரும் பிறந்த குழந்தையை மட்டும் கொஞ்ச, பையனுக்கு கோவிச்சிக்கிட்டு மாடிக்கு போயிட்டான். காலைலேர்ந்து கீழேயே வரலை. வினோதா மட்டும்தான் அவனுக்கு டிரஸ் எடுத்து வந்து அவனை அவ மடியில வச்சிகிட்டதும் அவனுக்கு சந்தோசம் தாங்கலை சரசு. ரொம்ப தேங்ஸ்டி” என்று சொன்னாள் சரண்யா.

அதை கேட்டதும் பெரிய குழந்தையின் மனதை புரிந்து கொண்ட வினோதாவின் நோக்கம் புரிந்தது சரஸ்வதிக்கு, அக்காவாக பெருமிதம் கொண்டாள்.